திருச்சானூர் கோயில் பிரம்மோற்சவம்: பிரம்ம தேரில் அருள்பாலித்தார் தாயார்
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று காலை பிரம்ம தேரில் தாயார் அருள் பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது. கரோனா பரவலால் இந்த ஆண்டு இவ்விழா ஏகாந்தமாக நடைபெற்றது. இதனால் மாட வீதிகளில் திருவீதிவுலா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்விழாவின் 8-ம் நாளான நேற்று காலை தேருக்கு பதில் பிரம்ம தேரில் தாயார் பத்மாவதி அலங்காரத்தில் முத்து அங்கி அணிந்து அருள் பாலித்தார். இரவு குதிரை வாகனத்தில் தாயார் எழுந்தருளினார். இன்று பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளாகும். வழக்கமாக இந்த நிறைவு நாளில் வெகு விமரிசையாக பஞ்சமி தீர்த்தம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடுவார்கள். கரோனா காரணமாக இம்முறை பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏகாந்தமாக நடத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் யாரையும் தேவஸ்தானம் புனித நீராட அனுமதிக்காது என தெரிவித்துள்ளது.
source https://www.hindutamil.in/news/india/603003-thiruchanur.html?frm=rss_more_article